வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரிடம் நூதன முறையில் ரூ.20 லட்சம் பறிப்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரிடம் ரூ.20 லட்சத்தை நூதன முறையில் மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

கோவை - பொள்ளாச்சி சாலை, வடபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம்(63). இவர், கிணத்துக்கடவு அருகேயுள்ள, முத்தூரில் கல்குவாரி டெண்டர் எடுத்து நடத்தி வருகிறார். தவிர தனியாக பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று (ஜன 15) மதியம் 5 பேர், பஞ்சலிங்கம் வீட்டுக்கு வந்தனர். தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி, அவர்களது வீட்டை சோதனை செய்தனர்.

பின்னர், அவரது வீட்டில் இருந்த ரூ.20 லட்சம் தொகை, காசோலை புத்தகம், செல்போன்கள், சிசிடிவி காட்சி பதிவாகும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்து கொண்டு, நாளைக்கு பொள்ளாச்சியில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு கூறி அந்நபர்கள் சென்றுள்ளனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பஞ்சலிங்கம், கிணத்துக்கடவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.அதில் மர்மநபர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி பணத்தை நூதன முறையில் பறித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் யார் என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE