வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கு: ஒருவர் சிக்கினார்; போலீஸ் தீவிர விசாரணை

By ந.சரவணன்

வேலூர்: வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கில் ஒருவரைப் பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு 16 கிலோ எடையுள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் கடந்த 15-ம் தேதி திருடுபோனது. இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொள்ளையரைப் பிடிக்க 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல் துறையினர் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர்.

மேலும், உள்ளூர் காவல் துறையினர் வேலூரில் உள்ள தங்கும் விடுதிகள், தொலைதூர குடியிருப்புகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள வீடுகள், மாவட்ட எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தினர். நகைக்கடை அமைந்துள்ள தோட்டப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

வேலூர் - காட்பாடி சாலை, வேலூர் - ஆற்காடு சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், நகைக்கடையில் பணியாற்றி வரும் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் தனிப்படை காவல் துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். நகைக்கடை அமைந்துள்ள இடத்தின் அருகாமையில் உள்ள காலி இடத்தையொட்டி தங்கும் விடுதி கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த கட்டிடத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர் அவர்களது கைரேகைகளை பதிவு செய்து, விசாரணை முடியும் வரை யாரும் சொந்த ஊருக்கோ அல்லது வெளியே எங்கேயும் செல்லக்கூடாது என எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், நகைக்கடை திருட்டு சம்பவத்தில் கடையின் பின்பக்கம் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த நபர் ஒருவர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடித்து, அந்த கேமராக்களை செயலிழிக்க செய்து அதன் பிறகு திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

மேலும், அவரது முகம் கண்காணிப்பு கேமிராவில் அடையாளம் தெரியாமல் இருக்க அவரது முகத்தில் முகமூடியும், கைகளில் கையுறையும் அணிந்தபடி உள்ளே வந்து 16 கிலோ எடையுள்ள தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

நகைக்கடைக்குள் நுழையும் மர்ம நபர் 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், மெலிந்த தேகத்துடன் இருப்பதால் அந்த வயதுடைய நபர்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் பட்டியலை கொண்டு தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், நகைக்கடையில் திருட்டுச் சம்பவம் நடந்து நேரத்தில் கடையின் சற்று தொலைவில் ஒரு ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக நிற்பது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதைகொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த ஆட்டோ உள்ளூரைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தனிப்படை காவல் துறையினர் கூறியதாவது, ‘‘வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கில் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமன் (22) என்பவரை பிடித்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். நகைக்கடையில் திருட்டுப்போன நகைகள் அவரிடம் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை கைப்பற்றி மதிப்பீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. நகைகளை அவர் விற்க முயன்றபோது காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார். 16 கிலோ நகைகளை அவர் ஒருவர் மட்டுமே கடையில் இருந்து வெளியே எடுத்து வந்து தப்பித்திருக்க முடியாது என்பதால், இந்த சம்பவத்திலும் அவருடன் சேர்த்து மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேக்கிறோம். அதன் அடிப்படையில் அவரிடமும், அவரது குடும்பத்தாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். நகை திருட்டு வழக்கில் பிடிப்பட்டுள்ள ராமன் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அனைத்து தகவல்களும் வெளியிடுவோம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE