விருதுநகர் அருகே ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக் கொலை

By இ.மணிகண்டன்

விருதுநகர் அருகே ஊராட்சி துணைத் தலைவர் கூலிப் படையினரால் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி அருகே உள்ள தடங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனந்தராமன் (45). இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர்கள்.

அனந்தராமன் கடந்த 2006 முதல் 2016 வரை வச்சக்காரப்பட்டி ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். 2016-ல் இந்த ஊராட்சி தனி ஊராட்சியானது. தற்போது ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக அனந்தராமன் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், ஒப்பந்த அடிப்படையில் டாஸ்மாக் லாரிகளும் இயக்கி வந்தார்.

இந்நிலையில், தன்னிடம் பணியாற்றும் குருசாமி என்பவரது திருமணம் தடங்கம் கிராமத்தில் இன்று (ஆக. 20) காலை நடைபெற்றது. திருமணத்துக்கு வந்த அனந்தராமன் மணமக்களை வாழ்த்திவிட்டு, தனது காரில் ஏறுவதற்காக சாலைக்கு வந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த தலைப்பாகை கட்டிய மர்ம நபர்கள் 4 பேர், அனந்தராமனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து எஸ்.பி. மனோகர், டிஎஸ்பி அருணாச்சலம் மற்றும் வச்சக்காரப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் தொடர்பாக, அனந்தராமன் ஊராட்சித் தலைவி ஜெயபாண்டியம்மாள் என்பவரது கணவர் பாலமுருகன் என்பவருக்கும் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அனந்தராமனைக் கூலிப்படையை ஏவி கொலை செய்தது யார் என்பது குறித்து, வச்சக்காரப்பட்டி போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE