உதகையில் பெண்ணைக் கொன்று கரோனாவால் இறந்ததாக நாடகமாடிய எஸ்.ஐ. கைது

உதகையில் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, கரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடிய காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகை க்யூ பிரிவு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் முஸ்தபா (55). இவருக்கும் உதகை காந்தல் புது நகர் பகுதியைச் சேர்ந்த மார்கரேட் என்கிற மாகிக்கும் (51) 15 ஆண்டுகளாகத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. மாகி உதகை மத்தியப் பேருந்து நிலையம் பகுதியில் சாலையோரத்தில் கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டிலிருந்த மாகியை உதவி ஆய்வாளர் முஸ்தபா அழைத்துச் சென்றுள்ளார். இரவு மாகி வீட்டுக்குத் திரும்பி வராத நிலையில், இன்று காலை உதவி ஆய்வாளர் முஸ்தபா, கரோனா தொற்றால் மாகி இறந்துவிட்டதாகக் கூறி அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், உறவினர்களிடம் யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்யுமாறும் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

மாகியின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் வீட்டுக்குக் கொண்டுசென்று உடலைப் பார்த்தபோது முகம் உட்படப் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் உடனடியாக உதகை ஜி1 காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மாகியின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீலகிரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். உதவி ஆய்வாளர் முஸ்தபாவை ஜி1 போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், உதவி ஆய்வாளர் முஸ்தபா, மது போதையில் மாகியைத் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ''மாகிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சமீபத்தில் மருத்துவமனை சென்று திரும்பியுள்ளார். நேற்று இரவு மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு லாட்ஜுக்கு முஸ்தபா அழைத்துச் சென்றுள்ளார். அங்கே இருவரும் மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், மாகியைக் கண்மூடித்தனமாக முஸ்தபா தாக்கியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த மாகி உயிரிழந்துள்ளார். காலையில் மாகியின் உடலை காரில் எடுத்துச் சென்று, அவரது வீட்டில் ஒப்படைத்துள்ளார். மேலும், கரோனாவால் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உறவினர் புகாரின் பேரில் முஸ்தபாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, அவர் தாக்கியதால்தான் மாகி உயிரிழந்ததாகத் தெரிவித்தார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE