மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பரமக்குடியில் இளைஞர் கைது 

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பரமக்குடி மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ்( 27). அதே தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 15 வயது மகள். அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். ஸ்டீபன் ராஜ் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் ஸ்டீபன்ராஜும் 15 வயதுடைய மாணவியும் அடுத்தடுத்த வீட்டில் இருப்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன் தனது வீட்டுக்கு வந்த மாணவியை வலுக்கட்டாயமாக மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இவ்வாறு கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக ஸ்டீபன் ராஜ் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தனது மொபைலில் மாணவியை ஆபாச படம் எடுத்துள்ளார்

இதனை வீட்டில் கூறினாள் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார் அதனால் மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு வயிறு பெரிதாக காணப்பட்டதால் மருத்துவப் பரிசோதனை செய்ததில் அம்மாணவி 9 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. மாணவியின் பெற்றோர்கள் ஸ்டீபன்ராஜிடம் கேட்டபோது, அவர்களுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதனையடுத்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஸ்டீபன்ராஜ் மீது மாணவி நேற்று புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸார் இன்று ஸ்டீபன் ராஜ் மீது போக்ஸோ மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

ஸ்டீபன் ராஜூக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவிக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE