அடமானம் வைத்த நகைகளை திருப்பி கேட்டதால் உறவினர் பெண்ணை கொலை செய்து உடல் புதைப்பு: கொலையாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் சலசலப்பு

By செய்திப்பிரிவு

செய்யாறு 

செய்யாறு அருகே அடமானம் வைத்த நகைகளை திருப்பிக் கேட்டதால் உறவினர் பெண்ணை காரில் அழைத்துச் சென்று கொலை செய்து உடலை புதைத்துவிட்டனர். இந்த வழக்கில் முக்கிய கொலையாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செண்பகவள்ளி (45). இவரது கணவர் தேவன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். குழந்தை இல்லாததால் தனியாக வசித்து வந்தார். கடந்த 20-ம் தேதி காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதாக அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தாய் வசந்தா, உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கடந்த 27-ம் தேதி செண்பகவள்ளியின் தாய் வசந்தா தூசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ஆய்வாளர் வசந்தி (பொறுப்பு) விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில், செண்பக வள்ளியின் கணவரான தேவனின் தங்கை மகன் ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ (45) என்பவர் செண்பகவள்ளியை காரில் அழைத்துச் சென்றதை சிலர் கடைசியாக பார்த்தது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் இளங்கோவை, காவல் துறையினர் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது, செண்பக வள்ளியை அழைத்துச் சென்று மீண்டும் வீட்டில் விட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

அவரது செல்போன் எண் ணின் அழைப்புகளின் அடிப் படையில் விசாரணையை மேற் கொள்ளப்பட்டது. அதில், காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (40) என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் கடந்த மாதம் 20-ம் தேதி செண்பகவள்ளியுடன் காரில் வந்த இளங்கோவுடன் தினேஷ்குமாரும் சென்றுள்ளார். காஞ்சிபுரம் -ஆற்காடு சாலையில் சென்றவர்கள் சக்கரமல்லூர் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தியுள்ளனர்.

பின்னர், காரிலேயே செண்பக வள்ளியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர். செண்பகவள்ளியின் உடலை காரின் பின் இருக்கையில் கிடத்திவிட்டு காஞ்சிபுரம் சென்றுள்ளனர். அங்கு இருவரும் மதுபானம் அருந்து விட்டு அங்கிருந்து மாமண்டூர்- உக்கல் சாலையில் குண்டியாந்தண் டலம் கிராமத்துக்கு சென்றுள்ளனர். அங்கு குவாரிக்கு அருகே புறம் போக்கு நிலத்தில் செண்பக வள்ளியின் உடலை புதைத்துவிட்டு இருவரும் சென்றுள்ளனர்.

நகைக்காக கொலை

செண்பகவள்ளியின் கணவர் இறந்த நிலையில், அத்தை உறவான அவரைப் பார்க்க இளங்கோ அடிக்கடி சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கூடாநட்பு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இளங்கோவின் செலவுக்கு செண்பகவள்ளி தனது நகைகளை கொடுத்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இளங்கோவனுக்கு திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு செண்பக வள்ளியின் வீட்டுக்கு செல்வதை அவர் தவிர்த்துள்ளார். இதனால், தான் செலவுக்காக கொடுத்த நான்கரை பவுன் நகைகளை திருப் பிக் கொடுக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளங்கோ செண்பகவள்ளியை கொலை செய் துள்ளார் என தெரிய வந்துள்ளது.

தற்கொலை முயற்சி

செண்பகவள்ளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளங்கோவை காவல் துறையினர் தேடி வந்தனர். இளங்கோவனின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பரிசோதித்தனர். நேற்று முன்தினம் தூசி காவல் துறையினர் தொடர்பு கொண்டபோது மறுமுனையில் பேசியவர், தான் வந்தவாசி காவலர் என கூறியுள்ளார். அவரிடம் விசாரித்ததில் கார் திருட்டு குறித்து விசாரிக்க வந்தபோது இளங்கோ ஆக்கூர் கிராமத்தில் மதுபானத்தில் பூச்சிமருந்தை கலந்து குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

தூசி காவல் துறையினர் விரைந்து சென்று விசாரித்தனர். அதில், காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் சலுக்கை கிராமம் அருகே சிவராஜ் என்பவர் நேற்று முன்தினம் காலை காரை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றுள் ளனர். அப்போது, இளங்கோ அந்த காரை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து வந்தவாசி காவல் நிலையத்தில் காரின் உரிமையாளர் தகவல் கொடுத்துள்ளார். காரில் சிவராஜின் மனைவியின் செல் போன் இருந்துள்ளது. அந்த செல்போன் எண்ணை வைத்து காரின் இருப்பிடத்தை கண்டறிந் துள்ளனர்.

காரை திருடிக் கொண்டு சென்ற இளங்கோ, ஆக்கூர் கிராமத்தில் மதுபானத்தில் பூச்சி மருந்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வந்தவாசி காவல் துறையினர் காரை தேடிச் சென்றபோது இளங்கோ ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித் துள்ளனர்.

உடல் தோண்டி எடுப்பு

வெம்பாக்கம் வட்டாட்சியர் சுப்பிரமணி, துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் வசந்தி முன்னிலையில், செண்பகவள்ளி புதைக்கப்பட்ட இடத்தை தினேஷ்குமார் நேற்று அடையாளம் காட்டினார். அந்த இடத்தை தோண்டியபோது செண் பகவள்ளியின் உடல் மீட்கப்பட்டது. அந்த இடத்திலேயே மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE