திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலையோரம் நின்றிருந்த மினி சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலாஜி( 18 ), தினேஷ்( 21 ). இவர்களில், பாலாஜி, பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். தினேஷ், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நண்பர்களான தினேஷும், பாலாஜியும் நேற்று இரவு திருவள்ளூரில் இருந்து நேமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, எதிர்பாராத விதமாக, திருவள்ளூர் அருகே புது சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் நின்ற மினி சரக்கு வாகனம் மீது இவர்களின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில், படுகாயமடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலாஜி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.