வண்டலூர்: சென்னை அடுத்த வண்டலூரில் மன அழுத்தம் காரணமாக மென்பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (50). வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜெயராணி (45) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கார்த்திகேயன் கடந்த ஆறு மாத காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் பேசி வந்துள்ளார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், அவரது மனைவி இரண்டு நாட்களுக்கு முன்பு பிள்ளைகளுடன் தனது தாயார் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்நிலையில், நேற்று தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டு வந்த கார்த்திகேயன், வீட்டில் தனது அறைக் கதவை தாழிட்டுக் கொண்டு, இரவு சுமார் 7 மணி அளவில் தனக்குத் தானே உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை வீட்டிற்கு வந்த மனைவி கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்காதால் உறவினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, கார்த்திகேயன் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
» சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
» சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி பொருட்கள் கன்டெய்னருடன் திருட்டு: 6 பேர் கைது
இது பற்றி தகவல் அறிந்த தாழம்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதி வைத்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், ‘எனக்கு பலர் செய்வினை வைத்துள்ளார்கள். இதிலிருந்து என்னை காப்பாற்றிக் கொள்ள நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என கார்த்திகேயன் எழுதி இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கார்த்திகேயன் இந்தக் தகவலை தனது தம்பிக்கும் இமெயிலில் அனுப்பி உள்ளார். அதில், ’எனது மறைவுக்குப் பிறகு எனது குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளவும் அவர்களை கைவிட்டு விடவேண்டாம்’ என உருக்கமாக எழுதி இருக்கிறார் கார்த்திகேயன்.
முன்னதாக, கார்த்திகேயன் மாரடைப்பில் இறந்ததாக குடும்பத்தினர் உண்மையை மறைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கார்த்திகேயனின் தம்பி போலீஸில் புகார் தெரிவித்ததால் குடும்பத்தினர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனையில் அவர் மின்சாரம் பாய்ந்து தான் உயிரிழந்தார் என தெஎரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாழம்பூர் போலீஸார், மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
>> தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் வந்தால் இலவச தொலைபேசி எண் ‘104’-ஐ தொடர்பு கொண்டு அந்த எண்ணத்தில் இருந்து விடைபெற ஆலோசனை பெறலாம்.