சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட விமானத்தின் அவசரகால கதவை பயணி திறக்க முயன்றதால் சலசலப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட விமானத்தின் அவசரகால கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் (செப்.19) இரவு 11 மணிக்கு 152 பயணிகளுடன் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, திடீரென விமானத்தின் அவசரகால கதவு திறப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. பயணிகள் பீதியடைந்தனர். விமானி உடனடியாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார்.

பயணம் ரத்து: பணிப்பெண்கள் ஆய்வு செய்ததில், அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் அழுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த கதவின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த மும்பையை சேர்ந்த வருண் பாரத்(45) என்ற பயணிதான் அதை அழுத்தியுள்ளார் என்றும் தெரிந்தது.

தெரியாமல் அழுத்திவிட்டதாக அவர் கூறினார். இதை ஏற்காத விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணியிடம் விசாரணை நடத்தினர். அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை விமான நிலையகாவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியது, விமானத்துக்குள் வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வருண் பாரத் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE