உடுமலை: உடுமலை அருகே பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் கல்லாபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி( 44). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2022-ம் ஆண்டு நகரப் பேருந்தில் சென்றபோது, முன் இருக்கையில் பயணித்த 12 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் உடுமலை மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று (செப்டம்பர் 19) இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஸ்ரீதர், தண்டபாணிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.