புதுச்சேரி மத்திய சிறைக்குள் மோதல்: விசாரணைக் கைதிகள் தாக்கியதில் தண்டனை கைதி காயம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறைக்குள் மோதல் ஏற்பட்டு தண்டனை கைதியை, விசாரணை கைதிகள் 10 பேர் சேர்ந்து கற்களால் தாக்கியுள்ளனர். இதில் அந்தக் கைதிக்கு காயம் ஏற்பட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என 325 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தண்டனை கைதிகளான மர்டர் மணிகண்டன், தமிழ் மணி ஆகியோருக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது‌. இதையடுத்து இருவரையும் சிறை வார்டன் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தமிழ் மணியை, இன்று விசாரணை கைதிகள் 10 பேர் ஒன்று திறண்டு கற்களால் சராமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் தமிழ் மணி காயமடைந்தார். இதைப் பார்த்துவிட்டு அங்கு வந்த சிறை வார்டன் விசாரணைக் கைதிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, காயமடைந்த தமிழ் மணியை மீட்டு சிறை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மத்திய சிறைக்குள் கைதிகளுக்குள் நடந்த மோதல் தொடர்பாக சிறைத் துறை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE