190 பேரிடம் ரூ.132 கோடி பறிப்பு: சென்னையில் முதியவர்களை ‘சைபர் க்ரைம்’ கும்பல் குறிவைப்பது எப்படி?

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: மும்பை சைபர் க்ரைம் போலீஸ் எனக் கூறி சென்னையில் 190 பேரிடம் ரூ.132 கோடி பணம் பறிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளில் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் வைத்திருக்கும் முதியவர்கள், குறிப்பாக நிரந்தர வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள், தொழில் செய்பவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று சமீப காலமாக மிரட்டி பணம் பறித்து வருகிறது. அதாவது, அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பெட்டெக்ஸ், புளூடார்ட் கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல் அழைப்பு வரும். அதில், பேசுபவர்கள், “உங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப புலித்தோல், போதைப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், சிம்கார்ட்டுகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றும் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்துள்ளது” எனக் கூறுவார்கள்.

அல்லது தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறி, “உங்களது செல்போன் எண்ணை பயன்படுத்தி பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில், கோடிக் கணக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் (ஹவாலா) நடைபெற்றுள்ளது. எனவே, இது தொடர்பாக மும்பை சைபர் க்ரைம் போலீஸார் அல்லது சிபிஐ போலீஸார் விசாரணை செய்வார்கள்” எனக் கூறி இணைப்பை, மற்றொரு நபருக்கு ஃபார்வேர்டு செய்வார்கள்.

எதிர்முனையில் காவல் துறை அதிகாரி போன்று ஒருவர் பேசுவார். அவர் ஸ்கைப் போன்ற சமூக வலைதள ஆப்பை செல்போனில் நம்மை பதிவிறக்கம் செய்ய வைத்து, அதன் மூலம் வீடியோ காலில் போலீஸ் போன்று சீருடை அணிந்து கொண்டு மிரட்டும் தொனியில் பேசுவார். நாம் சட்ட விரோத செயல் செய்வது போலவே பேசுபவர்கள் கைது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால் அவர்கள் சொல்வதுபோல் பணத்தை அனுப்பும்படியும், அந்தப் பணத்தை ஆய்வு செய்த பின்னர் மீண்டும் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு பணத்தை திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறுவார்கள்.

நாம் நமது நேர்மையை நிரூபிக்கும் வகையில் அவர்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு நமது மொத்த பணத்தையும் அனுப்பி வைத்து விடுவோம். அதன் பின்னர், எதிர் முனையில் பேசுபவரின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது. அதன் பிறகே நாம் ஏமாற்றப்பட்டதை உணர்வோம். இதுபோன்ற மோசடி நிரந்தர வைப்பு தொகை வைத்திருப்பவர்கள், அதிகளவு பணம் வைத்திருக்கும் முதியவர்களை குறிவைத்தே அதிகளவு நடைபெற்று வருகிறது.

சென்னையில் மட்டும் இந்த வருடத்தில் இதுவரை 190 பேர் ரூ.132 கோடியை இழந்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளில் ஏமாறாமல் விழிப்புடன் இருக்கும்படி சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார். மேலும், இந்த மோசடி கும்பலை பிடிக்க கூடுதல் காவல் ஆணையர் ராதிகா, துணை ஆணையர் ஜெரினா பேகம், சைபர் க்ரைம் ஏடிசி-யான ஜீவானந்தம், உதவி ஆணையர்கள்கள் பால் ஸ்டீபன், காவியா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE