சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் பெண் சடலம் மீட்பு: ஒருவர் கைது

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னை மணலியைச் சேர்ந்த திருமணம் ஆகாத இளம் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து சாலையில் வீசிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார், ஒருவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை துரைப்பாக்கம், குமரன் குடில் 1-வது பிரதான சாலை, 3-வது குறுக்குத் தெரு சந்திப்பில் கட்டுமான பணி ஒன்று நடைபெற்று வருகிறது. அந்த கட்டுமான பணிக்கு வந்த மாரி என்பவர் அங்கு சூட்கேஸ் ஒன்று இருப்பதை கண்டுள்ளார். சாலையில் கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த அந்த சூட்கேசை அங்கிருந்து தள்ளியுள்ளார். அப்போது அந்த சூட்கேசில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் அவ்வழியாக சென்ற துரைப்பாக்கம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் பொன்னுசாமியை அழைத்து காண்பித்துள்ளார். இதையடுத்து சூட்கேசை திறந்து பார்த்த போது ஒரு பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து அங்கு வீசிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த தென் சென்னை இணை ஆணையர் சி.பி.சக்கரவர்த்தி, அடையாறு துணை ஆணையர் பொன்கார்த்திக்குமார், துரைப்பாக்கம் உதவி ஆணையர் சையத் பாபு, துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட காவல்துறையினர் சூட்கேசைக் கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மணலியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் திருமணம் ஆகாதவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக பாலியல் தொழில் தரகர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண் ஒருவரை கொலை செய்து கண்டம் துண்டமாக வெட்டி சூட்கேஸில் அடைத்து வீசிச் சென்ற சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE