கிழக்கு தாம்பரம் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் அருகே குடியிருப்புப் பகுதியில் நாட்டு வெடி குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் அண்ணா தெரு மற்றும் ஆறுமுகநாத் தெரு சந்திப்பின் அருகே குடியிருப்பு பகுதியின் அருகில் யாரும் வசிக்காத இடத்தில் இன்று அதிகாலை 1:30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் ஒருபொருள் வெடித்துள்ளது. வெடித்த இடத்தில் இருந்து புகை வருவதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் ஆய்வு செய்தபோது பனியன் துணிகளால் சுற்றப்பட்டு நாட்டு வெடிகுண்டு வெடித்து இருப்பது தெரிந்தது. இதனையடுத்து நாட்டு வெடிகுண்டின் சிதறிய பாகங்கள் மற்றும் அவ்விடத்தில் இருந்த தடயங்களை போலீஸார் சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டு வெடித்த இடம் குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் (28) என்பவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, போலீஸார் திவாகர் வீட்டிற்குச் சென்று விசாரித்த போது அவர் அங்கு இல்லை என்பது தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புக்கு அருகிலேயே நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE