குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே தூங்கும் போது கொசுவத்தி சுருள் நெருப்பு நைட்டியில் பற்றியதில் வடமாநில பெண் படுகாயமடைந்துள்ளார். ஆபத்தான நிலையில், அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பஷீர் ஷேக். இவர் தனது மனைவி ரெஜியா சுல்தானா (28) மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கடந்த 15 ஆண்டுகளாக குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு உணவு அருந்திய பிறகு குடும்பத்தினர் அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். கொசுவை விரட்டுவதற்காக வீட்டில் கொசுவர்த்தி சுருள் ஒன்று வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நள்ளிரவில் கொசுவர்த்தி சுருள் எதிர்பாராதவிதமாக கொசு வலையில் பட்டு மளமளவென தீ பிடித்தது. இதில், ரெஜியா சுல்தானாவின் நைட்டியிலும் தீப்பட்டு பற்றி எரியத்தொடங்கியது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் பஷீர் ஷேக், மனைவி மீது பற்றிய தீயை அணைக்கப் போராடினார். இதில், அவருக்கு வலது கையில் தீக்காயம் ஏற்பட்டது.
மேலும், ரெஜியா சுல்தானாவுக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டை பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் வலியால் அலறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து, இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் ரெஜியா சுல்தானா சிகிச்சை பெற்று வருகிறார்.