சென்னை | மாணவர்களை தாக்கிய 2 பேர் கைது: பாடகர் மனோ மகன்கள் மீதும் வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: மது போதையில் தகராறு செய்து மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பிரபல பின்னணி பாடகர் மனோ மகன்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆலப்பாக்கம், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், மதுரவாயல் ஜானகி நகரைச் சேர்ந்த நிதிஷ் என்ற ஐடிஐ மாணவரும் வளசரவாக்கம் தேவி குப்பத்தில் உள்ள கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் பயிற்சி முடிந்து, பாடகர் மனோ வீட்டருகே உள்ள உணவகத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 4 பேர், கிருபாகரன், நிதிஷ் ஆகிய இருவரையும் அழைத்து வீண் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் கிருபாகரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடம் வந்த வளசரவாக்கம் போலீஸார், கிருபாகரன், நிதிஷை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விசாரித்தனர்.

இதில், தாக்குதல் நடத்தியது பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்களான ஷகீர்(38), ரபீக்(35) என்பதும் மேலும் இருவர், அவர்களது வீட்டில் வேலை செய்துவரும் வளசரவாக்கம் தேவி குப்பம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(28), தர்மா (23) என்பதும் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்த போலீஸார், விக்னேஷ், தர்மாவைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE