தாழையூத்து | மாணவர்களின் புத்தகப் பையில் இருந்த அரிவாளால் ஆசிரியர்கள் அதிர்ச்சி 

By அ.அருள்தாசன்

தாழையூத்து: நெல்லை தாழையூத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய சோதனையில் மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாள் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சகமாணவர்களுக்குள் இருந்த பிரச்சினை காரணமாக பள்ளிக்கு அரிவாளை எடுத்து வந்த 2 மாணவர்களை தாழையூத்து போலீஸார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்துப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் வழக்கமாக மாணவர்களின் புத்தகத்தை உள்ளிட்டவற்றை சோதனை செய்யும் பணியை இன்று மேற்கொண்டனர். அப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறையில் சோதனை செய்தபோது மாணவர் ஒருவரின் புத்தகப் பையில் அரிவாள் இருந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் தாழையூத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அங்கு வந்த போலீஸார் அரிவாள் எடுத்து வந்த மாணவரிடமும் அவரது சக மாணவர் ஒருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் இருவரின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களுடன் காவல் நிலையத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்றனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட அந்த இரண்டு மாணவர்களுக்குள்ளும் ஏற்கெனவே முன்விரோதம் இருப்பதாகவும் மாணவரை மிரட்டுவதற்கு புத்தகப் பையில் அரிவாளை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு மாணவர்களிடமும் புகாரைப் பெற்ற போலீஸார், அவர்களை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்ட சிறார் குழும நீதிபதி, இருவரையும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க அறிவுரை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE