திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தென் பரங்குன்றம் பகுதியில் சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான மர குடோன் ஒன்று உள்ளது. இன்று (செப்.11) அதிகாலை சுமார் 5 மணிக்கு இந்தக் குடோனில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. இதுபற்றி அறிந்த வாட்ச்மேன் ஏகாம்பரம் திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே அங்கு சென்ற திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கத் தொடங்கினர். தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கூடுதல் தீயணைப்பு வாகனங்களை வரவழைக்க முயற்சிக்கப்பட்டது.
ஆனால், இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டதால் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதமாகின. இது குறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரிக்கின்றனர்.