திருப்பூர்: திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ஸ்ரீசுரபி கார்டனை சேர்ந்தவர் வினோத் குமார் (42). ஃபேன்சி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி புஷ்பா (38). இவர்களது மகள் ஸ்ரீவைஷ்ணவி (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மகன் அஜய் (14) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று (செப் 10) வினோத்குமாரும், புஷ்பாவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மங்கலத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்கள் வஞ்சிபாளையம் மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி வினோத்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வினோத் குமார் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வினோத்குமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று புஷ்பா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வினோத்குமார் உடலும் பிரேத பரிசோதனைக்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
» உயர் அதிகாரிகள் வாடகை கார் சர்ச்சை: ஆளுநர் தலையிட புதுச்சேரி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கோரிக்கை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருமுருகன்பூண்டி போலீஸார், விபத்தில் தொடர்புடைய லாரி டிரைவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.