தேனி | விநாயகர் ஊர்வலம் முடிந்து ஊர் திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

By என்.கணேஷ்ராஜ்

தேனி: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்து ஊர் திரும்பிய டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் மூன்று சிறார்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி மிகுந்த உற்சாகத்துடன் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு பொதுமக்கள் கொண்டாடினர். சிறுவர்களும் ஆங்காங்கே சிறு சிறு சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே மறவாபட்டியைச் சேர்ந்த சிறார்கள் விஷால், நிவாஸ், கிஷோர் மற்றும் சிலர் அவர்களது வீடு அருகே விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவிட்டு விநாயகர் சிலையை டிராக்டரில் அலங்காரம் செய்து கரைப்பதற்காக சிந்தலசேரி சென்றுள்ளனர்.

அங்குள்ள குளத்தில் சிலையை கரைத்து விட்டு அங்கிருந்து திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த 3 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த மூன்று சிறார்களான மறவபட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் விஷால் (14), தமிழன் மகன் நிவாஸ் (14), பிரபு மகன் கிஷோர் (14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேவாரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து மூன்று சிறார்களின் உடல்களைக் கைப்பற்றி பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் 3 சிறார்கள் உயிரிழந்த சம்பவம், மறவபட்டி கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE