சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் கொலை 

By த.அசோக் குமார்

தென்காசி: சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெளியப்பன் (49). அதிமுக பிரமுகரான இவர் அரசு ஒப்பந்ததாரர் ஆவார். இவரது மனைவி மாரிச்செல்வி (45) மேலநீலிதநல்லூர் ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவராக பதவி வகித்துள்ளார்.

வெளியப்பன் மேலநீலிதநல்லூரில் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலையில் வழக்கம்போல் நடைப்பயிற்சி சென்றபோது, அங்கு வந்த மர்ம கும்பல் வெளியப்பனை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பனவடலிசத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்வவ இடத்துக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் திருவிழாவில் வெளியப்பன் தரப்பினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வெளியப்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE