பூந்தமல்லியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை - 3 மருத்து கடைகளுக்கு ‘சீல்’

By இரா.நாகராஜன்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 3 மருந்துக் கடைகளுக்கு இன்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ’சீல்’ வைத்தனர்.

சமீபத்தில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் தங்கி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவர் மீண்டும் கர்ப்பமான நிலையில் பூந்தமல்லியில் உள்ள மருந்து கடை ஒன்றில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அப்பெண், பூந்தமல்லியில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது. தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருவள்ளூர் மண்டல உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அம்மு குட்டி அறிவுறுத்தலின் பேரில், பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் சரகங்களின் மருந்துகள் ஆய்வாளர்களான ரூபினி, பவானி மற்றும் பாண்டியன் ஆகியோர் இன்று பூந்தமல்லி பகுதிகளில் மருந்து கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், 3 மருந்து கடைகளில், உரிய மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இன்றி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, உரிய மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இன்றி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்த அந்த 3 மருந்து கடைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் மருந்துகள் ஆய்வாளர்கள் ’சீல்’ வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE