தாம்பரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு 

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: தாம்பரம் அருகே வெங்கம்பாக்கத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். மேலும், ரூ.45 ஆயிரம் ரொக்கத்தையும், 100 கிராம் வெள்ளியையும் அவர்கள் அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து திருடிச் சென்றுள்ளனர்.

தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சி வெங்கம்பாக்கம் ஜெயராம் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் சிவசங்கர் (32). இவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேவி துர்கா. இருவரும் நேற்று இரவு 11 மணிக்குப் பிறகு வீட்டில் உறங்கச் சென்றனர்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 3.45 மணியளவில் கொள்ளையர்கள் சிவசங்கர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து ஹாலில் இருந்த 100 கிராம் வெள்ளிப் பொருட்களையும் ரூ.45 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிக்கொண்டு, பின்னர் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த துர்காதேவியின் கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி சரடையும் அறுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இதையடுத்து பதறி எழுந்த துர்கா தேவி கூச்சல் போட்டுள்ளார். அவரது கூச்சலை கேட்டு வேறு அறையில் உறங்கிக் கொண்டிருந்த சிவசங்கரன் எழுந்து ஓடிவந்துள்ளார். ஆனால், அதற்குள் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பீர்க்கங்காரணை போலீசில் சிவசங்கரன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டுக்கு வந்து விசாரணை நடத்திய போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

காலையில் கடைக்குச் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு: மேற்கு தாம்பரம் ரமணி நகர், 8வது தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (36). இன்று காலை மகனுடன் வீட்டின் அருகேயுள்ள கடைக்கு மாவு வாங்க சென்றுள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கலைச்செல்வியின் கழுத்தில் கிடந்த மூன்று சவரன் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீஸார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு வழிப்பறி நபர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE