பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கையாடல் செய்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் அரசுஉதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராள மான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு, சின்னக்கலையம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயா (55), ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இதே பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அப்போது, ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட உதவித் தொகை பல லட்சத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் பழநி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆசிரியை விஜயாவை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.