திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: சென்னைக்கு வேலை தேடி வந்த கேரள காதல் ஜோடி ரயில் மோதி பலி

By பெ.ஜேம்ஸ் குமார்

பொத்தேரி: காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னைக்கு வேலை தேடி வந்த கேரளவைச் சேர்ந்த காதல் ஜோடி ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35). கேரளா மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (28). இருவரும் நேற்று இரவு 8:30 மணிக்கு கூடுவாஞ்சேரி – பொத்தேரி இடையே, பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது ஷரீப், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஐஸ்வர்யா படுகாயமடைந்தார்.

போலீஸார் விரைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மேலும், இறந்த ஐஸ்வர்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர் விசாரணையில், இருவரும் காதலர்கள் என்றும், திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால், வேலை தேடி சென்னைக்கு வந்ததாகவும், நண்பர் வீட்டுக்கு செல்லும்போது விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே, விபத்து குறித்து, தாம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE