திருவாரூர் அருகே அதிமுக நிர்வாகி மகன் கொலை: இளைஞர்கள் இருவர் கைது

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் பார்த்திபன். அதிமுக 9-வது வார்டு செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.இவரது மகன் ஜெயநாராயணன்(39), ஈரோட்டில் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மன்னார்குடி வந்த ஜெயநாராயணன் நேற்று முன்தினம் இரவு பந்தலடி பகுதியில் உள்ள டிபன் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்தமன்னார்குடி நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த பீர் முகமது(30), நம்பிராஜன்(30) ஆகியோரும் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

திடீரென ஜெயநாராயணனை, பீர்முகமது அவமரியாதையாகப் பேசியதால் ஏற்பட்ட தகராறு முற்றியதில், இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். கடையில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

கடையில் இருந்து வெளியே சென்ற ஜெயநாராயணனை, பீர்முகமது, நம்பிராஜன் ஆகியோர் பின்தொடர்ந்து சென்று, செங்கல் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயநாராயணன், மயங்கி விழுந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு,மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயநாராயணன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மன்னார்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, பீர்முகமது, நம்பிராஜன் ஆகியோரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ஜெயநாராயணனுக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE