நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டதால் பிளஸ் 1 மாணவி உயிரிழப்பா? - அரியமங்கலம் போலீஸார் விசாரணை

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: அரியமங்கலமத்தில் வீட்டில் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பிளஸ் 1 மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம், கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில். இவர் ரயில்வே ஊழியராக உள்ளார். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்லின் மெயில் (16). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் ஸ்டெபிக்கு நூடுல்ஸ் செய்து சாப்பிடுவது பிடிக்குமாம். இதனால் அடிக்கடி நூடுல்ஸ் உணவை விரும்பி சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஸ்டெபி வழக்கம்போல் ஆன்லைன் ஆர்டர் செய்து வரவழைத்த நூடுல்ஸை நேற்று (ஆக.31) இரவு சமைத்து சாப்பிட்டு உறங்கச் சென்றார். காலையில் ஜூடி தனது மகளை எழுப்பியபோது, ஸ்டெபி எழவில்லை. அதன்பின் தான் அவர் உயிரிழந்தார் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்டெபி இறப்பில் சந்தேகம் உள்ளதாக அரியமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அரியமங்கலம் போலீஸார் இன்று காலை ஸ்டெபி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றபோது, ஸ்டெபியின் உறவினர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனால், போலீஸார் தங்களுக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும் என்றுக்கூறி அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். ஸ்டெபியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவரது உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE