வால்பாறையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக பேராசிரியர்கள் உட்பட 4 பேர் கைது

By எஸ்.கோபு


பொள்ளாச்சி: வால்பாறையில் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தற்காலிக பேராசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் வெளியூர் மாணவிகள் வால்பாறை அரசு மகளிர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி ஒருங்கிணைந்த சேவை மையக் குழுவினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வால்பாறை அரசு கலைக்கல்லூரிக்கு சென்றனர்.

விழிப்புணர்வு நிகழ்வின் போது, மாணவிகளிடம் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா, படிக்கும் இடத்தில், சமுதாயத்தில் ஏதேனும் தொந்தரவு உள்ளதா போன்ற கேள்விகளை மாணவிகளிடம் கேட்டுள்ளனர். அப்போது இந்த குழுவினரிடம் கல்லூரியில் படித்து வரும் 7 மாணவிகள், இந்தக் கல்லூரியில் பணியாற்றி வரும் 2 தற்காலிக பேராசிரியர்கள் ஆய்வுக்கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர் ஆகியோர் ஆபாசமாக பேசுவது, மொபைல்போனுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவது என தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக புகார் தெரிவித்தனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குழுவினர், வால்பாறை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின்பேரில் வால்பாறை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்காலிக பேராசிரியர்கள் 2 பேர் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர் ஒருவர் மற்றும் என்.சி.சி. பயிற்சியாளர் ஒருவர் என 4 பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்கள் இருவர் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE