பொன்மார் அருகே மனைவியை கொன்ற வழக்கு: பாதிரியார் உட்பட 7 பேர் கைது 

By பெ.ஜேம்ஸ் குமார்

பொன்மார்: பொன்மார் அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் பாதிரியர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கொலையில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான பாதிரியாருக்கு போதை மாத்திரை விற்பனைக் கும்பலுடன் தொடர்பு இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகளான வைஷாலி (33) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியாரான விமல்ராஜ் (35) என்பவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவரும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்துள்ள பொன்மார் பகுதியில் உள்ள மலைத் தெருவில் குடியேறினர். விமல்ராஜ் பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட காரணத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி மாலை வைஷாலியை பாதிரியார் விமல்ராஜ் அடித்துக் கொலை செய்து விட்டு, அவர் உடல்நலக் குறைவால் இறந்ததாக நாடகமாடினார். ஆனால், வைசாலியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஷால்குமார் ஆகியோர் வைஷாலியின் கழுத்தில் காயம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தாழம்பூர் போலீஸில் அவர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், தனக்கும் தனது மனைவிக்கும் திருமணம் ஆனதிலிருந்து தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் சம்பவத்தன்று தகராறு முற்றியதில் அவரை அடித்துக் கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்துக் கொலை செய்ததாகவும் கொலையை மறைத்து உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடியதாகவும் பாதிரியார் விமல்ராஜ் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, தனது மகள் கொலையில் சந்தேகங்கள் உள்ளதாகவும் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறி வைஷாலியின் தாயார் மேரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை மறு விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்தக் கொலை குறித்து சிறப்பு விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மனைவியை கொலை செய்த பாதிரியார் விமல்ராஜ் பொன்மார் பகுதியில் வசித்து வந்த ஜெபஷீலா (30) என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்துள்ளனர். மேலும், தனது மாமியார் வீடு அமைந்துள்ள மும்பை பகுதியில் தங்கி இருந்தபோது அங்கிருந்த மெடிக்கல் ஷாப் ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளை விம்லராஜ் மொத்தமாக வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் கூரியர் மூலம் மொத்தமாக மாத்திரைகளை வரவழைத்து உள்ளூர் நபர்களுடன் இணைந்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். வீட்டில் சுமார் 2,800 போதை மாத்திரைகளை இருப்பு வைத்திருந்த நிலையில் விமல்ராஜின் மனைவி வைஷாலி இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, பொதுமக்களுக்கு விநியோகிக்க அவற்றை வாங்கி வைத்திருப்பதாக விமல்ராஜ் கூறியுள்ளார். ஆனால், அதில் சந்தேகம் அடைந்த வைஷாலி தனது சகோதரர் மூலம் மும்பையில் விசாரித்துள்ளார். அப்போது அவை போதை மாத்திரைகள் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே வழங்கப்படுபவை என்பதும் தெரிய வந்துள்ளது.

இதை எல்லாம் போலீஸில் சொல்லி விடுவேன் என்று வைஷாலி பாதிரியார் விமல்ராஜை மிரட்டி அவரை திருத்த முயன்றுள்ளார். ஆனால், இதைக் கேட்டு மிரண்டு போன விமல்ராஜ், ஜெபஷீலாவிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் (23), சந்திரசேகர் (19), அரவிந்த் (23), அஜய் (24), நங்கநல்லூரைச் சேர்ந்த மைக்கேல் (33), பொன்மார் மலைத்தெருவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்கிற சங்கர் (44), ஆகியோர் உதவியுடன் பாதிரியார் விமல்ராஜ் தனது மனைவி வைஷாலியை கொலை செய்து நாடகம் ஆடியதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தாழம்பூர் போலீஸார் இன்று புதிதாக வழக்குப் பதிவு செய்து ஜெபஷீலா (30) மற்றும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட மேற்கண்ட 6 பேர் உள்பட 7 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஜெபஷீலாவின் வீட்டிலும், பாதிரியாரின் வீட்டிலும் இருந்து போதை மாத்திரைகளையும் போலீஸார் கைப்பற்றினர். இவர்களில் கைது செய்யப்பட்ட தினேஷ் மீது 6 வழக்குகளும், அரவிந்த் மீது 6 வழக்குகளும், அஜய் மீது 20 வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE