திருவள்ளூர் அருகே தனியார் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 7 பெண் தொழிலாளர்கள் காயம்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில், 7 பெண் தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே பாண்டூரில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது பூண்டி அடுத்த அரும்பாக்கம் பகுதியில் இருந்து கனகம்மாசத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு 12 பெண் தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த பெண் தொழிலாளர்களில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, திருவள்ளூர் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE