தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் மேலும் 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த23 வயது இளம்பெண் கடந்த12-ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியைசேர்ந்த கவிதாசன்(25), திவாகர்(27), பிரவீன்(20) மற்றும் 17 வயதுசிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாப்பாநாடு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்யக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையே, இந்த சம்பவத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 4 பேருடன், வேல்முருகன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதன் அடிப்படையில், வேல்முருகன் மற்றும் 17 வயது சிறுவனைஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் நேற்று முன்தினம் இரவுகைது செய்தனர். தொடர்ந்து, வேல்முருகன் திருச்சி மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் தஞ்சாவூர் சிறார் இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் வேல்முருகனும், 17 வயது சிறுவனும் நின்றுகொண்டு, அப்பகுதியில் வேறு யாரும் வருகிறார்களா என்று கண்காணித்துள்ளனர். எனவே, குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இருவரையும் கைது செய்துள்ளோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE