காஞ்சியில் ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் கொலை: மதிமுக நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் மதிமுக மாவட்டச் செயலாளரிடம் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் காலாண்டார் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் கஸ்தூரி(63). இவர் 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர் வெளிமாநிலத்தில் பணி செய்கிறார். கஸ்தூரிக்கு இடம் வாங்குவது, விற்பது தொடர்பான வியாபாரத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி உதவியாக இருந்துள்ளார். இதனிடையே, கஸ்தூரி தனது வீட்டை விற்பதற்கு முயன்றுள்ளார்.

கடந்த 21-ம் தேதி கஸ்தூரி வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சிவகாஞ்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சென்று கஸ்தூரியின் வீட்டைத் திறந்து பார்த்த போது, வீட்டில் உள்ளே கஸ்தூரி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதையடுத்து, போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதியை போலீஸார் விசாரிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து, சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி குடும்பத்துடன் வந்த வளையாபதியை கருக்குப்பேட்டை அருகே மடக்கிய போலீஸார், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது “விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில்தான் எதுவும் தெரிய வரும்” என்றனர். கொலை வழக்கில் மதிமுக மாவட்டச் செயலாளர் விசாரிக்கப்படுவது காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE