சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய விவகாரத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏழ்மையை பயன்படுத்தி சென்னையில் சிறுமிகள், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் கும்பல் ஒன்று தள்ளி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ரகசிய தகவலின்படி கடந்த மே 17-ம் தேதி வளசரவாக்கம் ஜெய் நகரில் உள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாலியல் புரோக்கர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த நதியா, சுமதி, மாய ஒலி, தி.நகர் ராமச்சந்திரன், வளசரவாக்கம் அசோக்குமார், மேற்கு சைதாப்பேட்டை ரமணிதரன், தி.நகர் தண்டபாணி, மறைமலைநகர் விஜயலட்சுமி உட்பட 10 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 2 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இந்த வழக்கில் உதவி ஆணையர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சிறுமிகள் மற்றும் பெண்களை தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அழைத்துச் சென்று அங்கு நட்டசத்திர ஓட்டல்களில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (42) என்பவரை தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE