திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.53 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.53 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினர் புதன்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்துக்கு இன்று அதிகாலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். பயணிகளின் உடமைகளை சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த பெட்டியில், 2,291 கிராம் எடையுள்ள ரூ.1.53 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தது கண்டறியப்பட்டன.

இதை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்தப் பெண், சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காக தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணைக் கைது செய்த சுங்கத் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக சுங்கத் துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE