சென்னை | திறந்திருந்த எலக்ட்ரிக்கல் கடைக்குள் புகுந்து திருட்டு: குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் நசீர் (41). சென்னை, மண்ணடி, தம்பு செட்டி தெருவில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடை கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரம் கடந்த 8-ம்தேதி மாயமானது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன்படி, போலீஸார் வழக்குப்பதிந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் துப்புத் துலக்கினர்.

இதில், நசீர் கடையில் பணத்தை திருடிச் சென்றது கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த உமர் பாரூக் (58) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் சம்பவத்தன்று, கடையிலிருந்த நசீர் அருகிலுள்ள கடைக்கு சென்ற சமயத்தில் கடையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட உமர் பாரூக் கடையிலிருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உமர் பாரூக் மீது ஏற்கெனவே, எஸ்பிளனேடு, முத்தியால்பேட்டை, வடக்கு கடற்கரை காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE