இலங்கைக்கு கடத்தப்பட்ட 2,000 கிலோ பீடி இலை பறிமுதல்: தமிழகத்தை சேர்ந்த மூவர் கைது

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: நாட்டுப் படகில் இலங்கைக்குக் கடத்தப்பட்ட 2,000 கிலோ பீடி இலை பண்டல்களை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து தமிழகத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்தல் பொருட்கள் வருவதாக இலங்கை கடற்படையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து புத்தளம் மாவட்ட கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் திங்கட்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு ஒன்றை பிடித்து சோதனை செய்தனர்.

அந்தப் படகில் தமிழக கடலோர பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் 2,000 கிலோ பீடி இலைகள் பண்டல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், படகிலிருந்த மூவரை கைது செய்து கல்பிட்டி கடற்படை முகாமுக்கு இன்று அழைத்துச் சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE