சென்னை | மது போதையில் நண்பர்கள் தகராறு: தண்டையார்பேட்டையில் ரவுடி கொலை

By செய்திப்பிரிவு

சென்னை: திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் மணலி விரைவுச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (32). இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி என 7 வழக்குகள் உள்ளன.

இவர் போலீஸாரின், ரவுடி பட்டியலில் ‘சி’ பிரிவில் இருந்தார். இந்நிலையில் லோகேஷ், தண்டையார்பேட்டை பாலகிருஷ்ணா தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் அருகே தனது நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் மது அருந்தி உள்ளார். அப்போது மது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றவே லோகேஷை, அவருடன் மது அருந்தியவர்கள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தார். உடனே அவருடன் மது அருந்திய நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், புது வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லோகேஷ் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, 5 பேரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE