கரூர் அருகே காயத்துடன் பெண் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் அருகே வெங்கக்கல்பட்டியில் பயன்பாட்டில் இல்லாத தகரக்கொட்டகையில் காயத்துடன் அரை நிர்வாண கோலத்தில் பெண் சடலம் கிடந்ததது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் வெங்கக்கல்பட்டி அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவிலிருந்து டாஸ்மாக் கடைக்குச் செல்லும் வழியில் பயன்பாட்டில் இல்லாத தகரக்கொட்டகை ஒன்று உள்ளது. இங்கு ஏற்கெனவே அனுமதியில்லாத பார் போல சால்னா கடை செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் தலையில் காயத்துடன் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இந்தக் கொட்டகைக்குள் அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் அளித்த தகவலின்பேரில் வெள்ளியணை போலீஸார் மற்றும் கரூர் நகர டிஎஸ்பி-யான செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நேற்றிரவு இப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் நாயால் மோப்பம் பிடிக்க இயலவில்லை.

இதையடுத்து போலீஸார், அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் கரூர் மாவட்டம் புலியூர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த முத்தாயி (55) என்பதும், சித்தாள் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

நேற்றிரவு அப்பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் சண்டையிட்டு வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக ஒரு தகவல் கிடைத்திருப்பதை அடுத்து, முத்தாயியின் உறவினரான ஏமூரைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு முத்தாயி அங்கு எதற்காக வந்தார், அவருடன் இருந்த ஆண் யார், முத்தாயி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE