திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து, ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் வழியாக தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று திருவள்ளூர் அருகே ஒதிக்காடு பகுதியில் திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
ஆந்திர மாநிலம்- விசாகப்பட்டினத்திலிருந்து, ஜவுளிகளை ஏற்றி வந்த அந்த லாரியில், ஆந்திர மாநில பகுதியிலிருந்து, சுமார் 50 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக லாரியில் இருந்த திருப்பூரைச் சேர்ந்த சுகுமார் (26) மற்றும் சென்னை, நீலாங்கரையை சேர்ந்த கலைச்செல்வன்(31) ஆகியோரை கைது செய்தனர்.