சென்னை: தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபட்ட 17 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபட்டவர்கள் ஒரே வாரத்தில் 17 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜன.1 முதல் இந்த மாதம் 4 ஆம் தேதி வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் - ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்டதாக 434 பேர், திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 132 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்தாக 180 பேர், குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 29 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்டதாக 5 பேர் உட்பட மொத்தம் 813 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 29-ம் தேதி முதல் இந்த மாதம் 4 ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் மட்டும் 17 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் ஆணையர் அருண் கூறுகையில், “பொது மக்களின் நலனே முக்கியம். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE