போரூர் சுங்கச்சாவடி அருகே ரேஸ் பைக் மோதி தலைமை காவலர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பூந்தமல்லி: போரூர் சுங்கச் சாவடி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட தலைமைக் காவலர் ரேஸ் பைக் மோதி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (53). ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள எஸ்.ஆர்.எம்.சி. (போரூர்) காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.

குமரன் நேற்று மதியம் இரும்புலியூர்-புழல் பைபாஸ் சாலையில், போரூர் சுங்கச் சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தாம்பரத்திலிருந்து புழல் பகுதியை நோக்கி, அதிவேகமாக வந்த ரேஸ் பைக் குமரன் மீது வேகமாக மோதியது.

இதில் குமரனும், ரேஸ் பைக்கை ஓட்டி வந்த சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த சத்யசாய்ராமும் படுகாயமடைந்தனர். குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்யசாய்ராம், தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், உயிரிழந்த தலைமைக் காவலர் குமரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE