திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே ரெண்டலபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ஜார்ஜ் (27). இவரது மனைவி அருணா (25). இவர்களது குழந்தைகள் ரக் ஷன் ஜோ (7), ரக் ஷிதா (4). இவர்கள் நால்வரும் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
நல்லாம்பட்டி பிரிவு அருகே துவரங்குறிச்சி நோக்கி சென்ற கார், எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதுவதை தவிர்க்க பிரேக் பிடிக்க, நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதி, எதிரே வந்த ஜார்ஜின் இருசக்கர வாகனம் மீதும் மோதியது. இதில் ஜார்ஜ், அவரது மனைவி, குழந்தைகள் என நான்கு பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.