சென்னை: கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் லிபர்டி பிரிட்ஜில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் சாலையில் தரைத்தளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வங்கியின் உள்பகுதியில் இருந்து இன்று காலை (சனிக்கிழமை) திடீரென கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தி.நகர் தீயணைப்பு துறை வீரர்கள், அங்கு விரைந்து வந்தனர்.
இதற்குள்ளாக வங்கியினுள் தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வங்கியில் இருந்த ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், வங்கியில் உள்ள முக்கிய ஆவணங்கள், தீயில் கருகி உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சம்பவ இடத்தில் குவிந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.