விழுப்புரம் அருகே கிணறு வெட்டும்போது விபத்து: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே அருங்குறிக்கை கிராமத்தில் கிணறு வெட்டும் பணியின் போது ரோப் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே அருங்குறிக்கை கிராமத்தில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினை திருக்கோவிலூர் அருகே உள்ள பெருங்குருக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் (48), நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (40) மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வணை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) ஆகியோர் மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு (ஜூலை 29) சுமார் 8 மணியளவில் மீண்டும் கிணறு ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொக்லைன் இயந்திரத்தில் ரோப் கயிற்றால் பக்கெட்டை கட்டி கிணற்றுக்குள் 3 தொழிலாளர்களும் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் இரும்பு ரோப் அறுந்ததில் 100 அடி ஆழ கிணற்றில் 3 தொழிலாளர்களும் விழுந்தனர். இதில் 3 பேரும் கிணற்றுக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள், மூவரின் உடலையும் கிணற்றிலிருந்து மீட்டு மேலே கொண்டு வந்து கிடத்தினர். அப்போது மூவரின் உயிரிழப்புக்குக் காரணமான பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுநர், நிலத்தின் உரிமையாளர் மற்றும் பலியான மூவரையும் இந்தப் பணிக்கு அழைத்து வந்த நபர் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், பலியானவர்களின் உறவினர்களிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சு வார்த்தை நடத்தி மூவரின் உடலையும் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, "மூவரும் ரோப் அறுந்து விழுந்து இறக்கவில்லை. கிணற்றை ஆழப்படுத்த சட்டத்திற்கு புறம்பாக ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி உள்ளனர். அதில் வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலமாக இவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்" என இறந்தவர்களின் உறவினர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த விழுப்புரம் டிஎஸ்பி-யான சுரேஷ் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இந்தச் சம்பவத்துக்குக் காரணமான மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததால் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE