தருமபுரி ஓட்டலில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: 4 பேர் கைது

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி - இலக்கியம்பட்டி பகுதியில் ஓர் ஓட்டலில் இளைஞரைக் குத்தி கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி அடுத்த வி.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிக் (25). தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி பகுதியில் செயல்படும் பிரியாணி ஓட்டல் ஒன்றில் இவர் கிரில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். கடந்த 26-ம் தேதி இரவு 9.30 மணியளவில் இவர் பணியில் இருந்தபோது அந்த ஓட்டலுக்கு வந்த 4 இளைஞர்கள், அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் அவர்கள், முகமது ஆசிக்கை கத்தியால் குத்தியும், இரும்புக் கம்பியால் அடித்து தாக்கினர். தடுக்க வந்த கடை ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு அவர்கள் தப்பியோடினர்.

ஆபத்தான நிலையில் இருந்த முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆசிக் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட 4 தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட 4 பேர்

அதில், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை முகமது ஆசிக் காதலித்துள்ளார். இதை அந்தப் பெண்ணின் சகோதரர்கள் ஜனரஞ்சன் (27), ஜன அம்சபிரியன் (27) ஆகியோர் கண்டித்துள்ளனர். அதனால், ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் உறவினர்களான் ஓமலூரைச் சேர்ந்த கவுதம் (28), தருமபுரி மாவட்டம் சிவாடி கிராமத்தைச் சேர்ந்த பரிதிவளவன்(24) ஆகியோருடன் இணைந்து முகமது ஆசிக்கை கொலை செய்துள்ளனர் என தெரியவந்தது. எனவே, அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE