திருவேற்காடு: பொறியாளர் வீட்டில் 100 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை; போலீஸ் விசாரணை

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவேற்காட்டில் பொறியாளர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அயனம்பாக்கம், ஈஜிபி நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்(45). இவர் வெளிநாட்டில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோகிலா (40). இவர்களுக்கு பவதாரணி என்ற ஒரு மகள் உள்ளார். ஜனார்த்தனன் கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து திருவேற்காடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று மாலை (ஞாயிற்றுகிழமை) ஜனார்த்தனன் குடும்பத்துடன் சென்னை அண்ணாநகருக்கு ஷாப்பிங் செய்வதற்காகச் சென்றார். ஷாப்பிங் முடித்து ஜனார்த்தனன் குடும்பத்தினர் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்படாமல் கதவு சாவி போட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜனார்த்தனன் வீட்டினுள்ளே சென்று பார்த்த போது, மர்ம நபர்களால் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருவேற்காடு போலீஸார், கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE