80 பவுன் நகைகள் திருட்டு ம.பி. இளைஞர் கைது @ விருதுநகர்

By செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றி வருபவர் பாலமுருகன். கடந்த 13-ம் தேதிஇவர் வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தியதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிவகாசி ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை போலீஸார் மத்திய பிரதேசம் சென்று, தார் மாவட்டம் கிராம்பகோலியைச் சேர்ந்த பார்சிங் அம்லியரா (24) என்பவரைக் கைது செய்தனர். அவரை நேற்று வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

மேலும், திருட்டில் தொடர்புடைய 3 பேரை பிடிக்க மற்றொரு தனிப்படை போலீஸார் மத்திய பிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE