பெங்களூரு: பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பிஹாரை சேர்ந்த கிருத்தி குமாரி (24) என்ற பெண் பெங்களூருவில் உள்ள கோரமங்களாவில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி இரவு 11.10 மணியளவில் விடுதிக்குள் வந்த இளைஞர் ஒருவர், கிருத்தி குமாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரது கழுத்தில் கத்தியால் சரமாரியாக அந்த இளைஞர் குத்தினார்.
கிருத்தி குமாரியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த விடுதி தோழிகள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில் கோரமங்களா போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அதில், கிருத்தி குமாரியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞர் அபிஷேக் (27) என்பது தெரியவந்தது. இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர். இவர் கிருத்தி குமாரியின் அறையில் தங்கியிருந்த 25 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அபிஷேக் வேலையை இழந்ததால், அவரது காதலிக்கும் அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கிருத்தி குமாரி தலையிட்டு சண்டையிடுவதை தடுத்துள்ளார். மேலும் தனது தோழியிடம் சில நாட்கள் அபிஷேக்குடன் பேசுவதை நிறுத்துமாறு கூறி, அவரை வேறு தங்கும் விடுதியில் தங்க உதவி செய்துள்ளார்.
இதனால் அபிஷேக் அவரது காதலியை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கிருத்தி குமாரி மீதுஅபிஷேக் கோபம் அடைந்துள்ளார். அவர் தனது காதலை பிரித்துவிட்டதாக கூறி கத்தியால் குத்திகொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த திடுக்கிடும் தகவலை கேட்ட போலீஸார் போபாலுக்கு சென்று, அபிஷேக்கை நேற்று கைது செய்தனர். இந்த விவகாரம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.