ஈரோட்டில் ‘மனமகிழ் மன்றம்’ பெயரில் சூதாட்ட கிளப் நடத்திய திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ஈரோடு அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்திய திமுக பகுதிச் செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன் பாளையத்தில், சட்டவிரோதமாக சூதாட்ட கிளப் நடத்தப்படுவதாக, ஈரோடு எஸ்பி-யான ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சித்தோடு காவல் துறையினர், காலிங்கராயன்பாளையத்தில் சோதனை நடத்தியபோது, அங்கு காலிங்கராயன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் செயல்பட்டு வருவது தெரிந்தது. இந்த சூதாட்ட கிளப்பை திமுகவை சேர்ந்த சூரியம்பாளையம் பகுதிச் செயலாளரான குமார வடிவேல் என்பவர் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சூதாட்ட கிளப்புக்கு சீல் வைத்த போலீஸார், சூதாட்டத்துக்கு பணப் பறிமாற்றம் செய்யும் வகையில், 4 வண்ணங்களில் அச்சிடப்பட்ட 627 டோக்கன்களையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து திமுக பகுதிக் கழகச் செயலாளர் குமார வடிவேல் உட்பட 8 பேர் மீது சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE