திருவள்ளூர் | மாயமான இளைஞர் முந்திரி காட்டில் புதைப்பு: 17 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள முருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிரவீன்குமார் (19). கடந்த மாதம் 10-ம் தேதி இரவு, வீட்டுக்கு அருகே உள்ள ஏரிக்கரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மாயமானார்.

இதுகுறித்து, மணவாள நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பலால் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டு, முருக்கஞ்சேரி அருகே உள்ள கொப்பூர் முந்திரி காட்டில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக முருக்கஞ்சேரி பகுதியைசேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் கிருஷ்ணன் (27), தமிழ்ஒளி(27), நாகரத்தினம் என்கிற அஜய் (26), சாரதி(26), ரவி (26) ஆகிய 6 பேரை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் தெரியவந்ததாவது: செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லையில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் பிரவீன்குமார் கைதாகியுள்ளார். கிருஷ்ணன் உள்ளிட்டோர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததால்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை பிரவீன்குமார் அறிந்துகொண்டார்.

இதனால் கோபத்தில் இருந்த பிரவீன்குமார், கிருஷ்ணர் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் அஞ்சிய கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரும், கடந்த மாதம் 10-ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே வந்த பிரவீன்குமாரை கடத்தி சென்று கொப்பூர் முந்திரிக்காட்டில் தாக்கி கொலை செய்து, பள்ளம்தோண்டி புதைத்துள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பிரவீன்குமாரின் உடல் ஏடிஎஸ்பி ஹரிகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில், தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE